இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்
பண்பாட்டுச் சூழல் நடை
உலக அலையாதிக்காடுகள் தினத்தை முன்னிட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்க்கரை சாலைகளில் உள்ள அலையாத்திக்காடுகள், ஆற்றின் கழிமுகங்கள், வரலாற்று தளங்கள் சென்று பார்வையிட்டோம். 27.07.2025, ஞாயிறு அன்று பண்பாட்டு சூழல் நடையின் 33வது பயணத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.
காலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தனி சிற்றுந்து வாகனத்தில் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு இராமநாதபுரம் சுற்றுச் சாலையில் உள்ள வசந்தம் உணவகத்தில் காலை உணவை சாப்பிட்டோம். பின் அங்கிருந்து காலை 9.15 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம், ஆற்றாங்கரை ஊராட்சி பகுதியில் வைகை பொழிக்கு (estuary) வந்து சேர்ந்தோம். வைகையாறும் - பாக் விரிகுடா கடலும் கூடுமிடத்தை பார்வையிட்டோம். கடல்வாழ் உயிரிகள், கடல்சார் பறவைகள் குறித்து திரு. இரவீந்திரன் அவர்களும், வைகையின் கழிமுக பகுதியில் காணப்படும் தாவரங்கள் குறித்து திரு. கார்த்திகேயன் அவர்களும், கடல் நண்டு, சங்கு குறித்து திரு. விஸ்வா அவர்களும் எடுத்துரைத்தனர். ஆற்றாங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. முகமது அலி ஜின்னா அவர்கள் வைகை கழிமுக பகுதியில் ஊராட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள், இப்பகுதி மீனவர்களின் வாழ்வியல் குறித்து சிறப்புரையாற்றினார்.
அங்கிருந்து காலை 10.30 மணிக்கு சேதுபதி மன்னர்களின் சத்திரம், அழகன்குளம் அகழாய்வு நடைபெற்ற அரசினர் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றார். தாமதமானதால் தேவிப்பட்டணம் செல்லும் திட்டத்தை கைவிட்டு நேரடியாக காரங்காடு படகு குழாமிற்கு நண்பகல் 12.30க்கு சென்று விட்டோம்.
காரங்காடு வனச்சரக அலுவலர் திரு. திவாகர் அவர்கள், அலையாத்திக்காடுகளின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பின் பகல் 1.45 மணிக்கு வனத்துறையால் நடத்தப்படும் படகு சவாரியில் அலையாத்திக்காடுகளையும், கடலையும் கண்டு ரசித்தோம். ஆழம் குறைவான பொழியில் நிறுத்தி குளிக்கவும் அனுமதித்தார்கள். சிறுவர்களுக்கு (5-12 வயது) 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
படகு பயணத்தை முடித்துவிட்டு பகல் 3 மணிக்கு உப்பூர் கிராமத்தில் உள்ள எம்.எஸ் உணவகத்திற்கு வந்துவிட்டோம். மூன்று பொறித்த மீன்கள் அடங்கிய ஒரு மீன் சாப்பாட்டின் விலை 130 ரூபாய். முரல் மீன் பொரித்து தந்தார்கள்.
அங்கிருந்து சுந்திரபாண்டியன் பட்டணம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோயிலுக்கு மாலை 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். இக்கோயில் குறித்து திருமிகு தமிழினியாள் அவர்களும், தமிழ்தாசன் அவர்களும் எடுத்துரைத்தனர். பின் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரை நோக்கி புறபட்டு, இரவு 10 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி வந்து சேர்ந்தோம். பறவையியலாளர் ஹீமோக்ளோபின், காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் ஜோதிமணி, வெங்கடராமன் இப்பயணத்தில் 30க்கும் மேற்பட்ட கடற்கரை பறவைகளை ஆவணம் செய்தனர்.
eBird Checklist - 27 Jul 2025 - Vaigai River estuary, Atrangarai beach - 29 species https://ebird.org/checklist/S263068538
இராமநாதபுரம் என்னும் நெய்தல் நிலத்தின் சிறப்புகள்:
தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்பரப்பை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். தமிழ்நாட்டின் 1076 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ நீளமுள்ள கடற்கரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கு கடற்கரை பகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. கடல் பரப்பின் அங்கமான வளைகுடா (Gulf), விரிகுடா (Bay), நீரிணை (Strait), சேற்றுத்திட்டுகள் (Mudflats), கடல்தீவுகள் (Island), பவளத்திட்டுகள் (Coral Reef), சுண்ணாம்பு படுகை (Limestone shoals) போன்றவைகளும்; கடற்கரையோர கழிமுகங்கள் (Delta), ஆற்று பொழிமுகங்கள் (Estuaries), காயல்கள் (Lagoons) சதுப்புநிலங்கள் (Marsh & Swamps), அலையாத்திக்காடுகள் (Mangrove Forest), மணற்குன்றுகள் (Sand Dunes), உப்பங்கழிகள் (Salt Pans), உவர்நீர் ஏரிகள் (Lagoons), உள்நாட்டு ஏரிகள் (Manmade Lakes), கடற்பாறைகள் (Sea Rocks), செம்மண் தேரிக்காடுகள் (Red Sand Desert), கடற்கரை புதர்காடுகள் (Coastal Shrubs), புல்வெளிகள் (Coastal Grasslands) என பலவகைப்பட்ட சூழலியல் அமைப்புகளை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். ஆறும் கடலும் சேரும் பொழிமுகங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம்.
பழங்கால மக்கள் வாழிடங்கள், தொல்லியல் மேடுகள், மன்னர் கால பழமையான சமண, பௌத்த, சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ வழிபாட்டு தளங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. அழகன்குளம், தொண்டி, மருங்கூர்பட்டினம், தேவிபட்டினம், பெரியப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், கீழக்கரை, புதுப்பட்டினம், முடிவீரன்பட்டினம் போன்ற மிகப் பழமையான இயற்கைத் துறைமுகங்கள் இம்மாவட்டத்தில் இருந்துள்ளன. கிபி.13, 14ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளில் 'முத்தூற்றுக்கூற்றம்' எனும் நாட்டுப்பிரிவில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுகப் பட்டினங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ரோமானியர்கள், அரேபியர்கள், சீனர்கள், போர்ச்சுகீயர்கள், டச்சுக்காரர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் வணிகத்திற்காக வருகை புரிந்த வரலாறுகளையும் இராமநாதபுரம் மாவட்டம் கொண்டுள்ளது. வரலாற்று நோக்கிலும் சூழலியல் நோக்கிலும் பல சிறப்புகளை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட பல்லுயிரிய & சூழலியல் சிறப்புகள்
மன்னாரின் வளைகுடா “உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலம் என அழைக்கப்படுகிறது” ஏனெனில் இதில் 4,223க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடாவில் காணப்படும் அலையாத்திக்காடுகள் 9 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. அவை கடல்சார் பறவைகள் மற்றும் கடல் பாம்புயினங்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் உயிரினங்களுக்கு வாழிடமாகவும் ஆதாரமாகவும் உள்ளன. மன்னார் தேசிய பூங்கா மற்றும் பறவைகள் காப்பகத்திற்கு ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகள் வருகை தருகின்றன.
இராமநாதபுரம் வனத்துறை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் கீழ்காணும் இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிக்கின்றது:
- மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
- மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம்
- தேர்த்தங்கல் பறவைகள் காப்பகம்
- சக்கரக்கோட்டை பறவைகள் காப்பகம்
- மேலசெல்வனூர் & கீழசெல்வனூர் பறவைகள் காப்பகம்
- காஞ்சிரங்குளம் பறவைகள் காப்பகம்
- சித்திராங்குடி பறவைகள் காப்பகம்
- தனுசுகோடி பூநாரைகள் காப்பகம்
இதில் மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, தேர்த்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் காப்பகம் ராம்சார் தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு பறவைகள் சரணாலயங்கள் மற்றும் மூன்று ராம்சார் தளங்கள் கொண்ட ஒரே மாவட்டம் இராமநாதபுரம் விளங்குகிறது. இவை தவிர 13 அலையாத்திக்காடுகள் தொகுதிகள், 110 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பவளப் பாறைகள், கழிமுக பகுதிகள் இராமநாதபுரம் வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
- 117 வகை பவளத் திட்டுகள் (Corals)
- 14 வகை கடற்புற்கள் (Sea grasses)
- 158 வகை ஓட்டுலிகள் (crustaceans)
- 856 வகை மெல்லுடலிகள் (molluscs)
- 1147 வகை துடுப்பு மீன்கள் (fin fishes)
- 153 வகை முட்தோலிகள் (echinoderms)
- 181 வகை கடல்வாழைகள் (seaweeds)
ஒரு புள்ளிவிபரம் (https://myna.stateofindiasbirds.in) இராமநாதபுரம் மாவட்டத்தில் 248 வகை பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதில் 98 வகை பறவையினங்கள் வலசை பறவைகள் என குறிப்பிடுகிறது. இந்திய அரசு காட்டுயிர் சட்டத்தின் வரையறைப்படி பட்டியல் ஒன்றில் 33 வகை பறவைகள் அதில் அடங்கும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட 248 பறவைகளில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகத்தின் செம்பட்டியலில் 15 வகை பறவைகள் உள்ளன. அதில் சாம்பல் உப்புக்கொத்தி (Pluvialis squatarola), நீர்கால் உள்ளான் (Calidris tenuirostris), அகன்ற அலகு உள்ளான் (Calidris falcinellus), வளைமூக்கு உள்ளான் (Calidris ferruginea), ஆற்று ஆலா (Sterna aurantia), முசல் கிண்ணாத்தி (Esacus recurvirostris), பெரிய கோட்டான் (Numenius arquata), பட்டைவால் மூக்கன் (Limosa lapponica), கருவால் மூக்கன் (Limosa limosa), செங்கால் கல்திருப்பி (Arenaria interpres), டன்லின் உள்ளான் (Calidris alpina) என உலக இயற்கை பாதுகாப்பு கழகம் வரையறைப்படி அச்சுறுத்தல் மற்றும் அழிவை சந்திக்கும் 15 வகை பறவைகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. அனுமன் உப்புக்கொத்தி (Charadrius seebohmi) என்னும் பறவை தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பறவையியலாளர் இரவீந்திரன் மற்றும் பைஜு இருவரும் கடற்கரை பறவைகள், அதன் வாழிடம், இனப்பெருக்கம் நடைபெறும் இடம் என பல ஆய்வுகளை செய்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்லுயிரிய வகைமையின் சிறப்புகளை வெளிக் கொணர பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்களின் அரும்பணியை நாம் மனதார பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.
அடும்பும் எக்கரும்:
அடும்பு - தரையோடு தரையாகப் படர்ந்து வளரும் கொடி வகை. இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும். இக்கொடி வகையைக் கடற்கரை மணலில் படர்ந்திருப்பதைப் பலரும் கண்டிருக்கக்கூடும். இது நெய்தல் நிலத்தாவரம் என்பதை சில சங்க இலக்கியக் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
"அடும்பு இவர் அணி எக்கர்" (கலித்தொகை - 132)
"அடும்பமர் எக்கர் அம்சிறை உளரும்” (அகநானூறு - 320)
"குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு" (நற்றிணை - 254)
மேற்சொன்ன சங்கப்பாடல் குறிப்புகள் இது நெய்தல் நிலக் கொடி என்பதை உறுதி செய்கிறது.
"மானடியன்ன கவட்டிலை அடும்பு" (குறுந்தொகை - 243)
மேற்சொன்ன சங்கப்பாடல் மூலம் அடும்பின் இலை இரண்டாக பிளவுற்றிருக்கும் என்பதை அறிய முடிகின்றது.
எக்கர் - என்னும் சொல்லுக்கு மணற்மேடு என்று பொருள். சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் எக்கர் என்னும் சொல் பரவிக் கிடக்கின்றது. சங்க இலக்கியத்தில் தோரயமாக 7000 சொற்கள் இடம் பெற்றுள்ளது. குறைந்தது நான்கைந்து முறையாவது இந்த 7000 சொற்களையும் கடந்து வந்திருப்பேன். சங்க இலக்கியத்தில் எனக்கு விருப்பமான சொற்களில் ஒரு பத்து சொற்களைச் சொல்லச் சொன்னால் அவசியம் அப்பட்டியலில் "எக்கர்" என்னும் சொல்லும் இடம்பெற்றிருக்கும். காரணம் என்ன என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை.
அடும்பும் எக்கரும் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரை திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் எழுதியது. இத்தலைப்பில் உள்ள படங்கள் வைகையாறு கடல் சேரும் பகுதியில் அவரால் எடுக்கப்பட்டவை.
ஆறுகளும் கடலும் கூடுமிடங்கள்:
இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை எல்லைகளாக வேம்பாறும் பாம்பாறும் திகழுகின்றன. வேம்பாறு வேம்பார் என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு சாயல்குடி மூக்கையூர் அருகே கடலில் கலக்கிறது. வைகையாறு அழகன்குளம் அருகே கடலில் கலக்கிறது. கோட்டைக்கரையாறு காரங்காடு அருகே கடலில் கலக்கிறது. பாம்பாறு சுந்தரபாண்டியன்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. இவைத் தவிர்த்து இன்னும் சில ஆறுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கின்றன.
வைகையாறு - கடல் சேருமிடம்:
தேனி மாவட்டம், மேகமலை வருசநாடு மலைப்பகுதிகளில் தோன்றும் வைகையாறு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 295 கிமீ நீளம் ஓடி இறுதியாக ஆற்றாங்கரை என்னும் பகுதியில் பாக் விரிகுடா (Palk Bay) கடலில் கலக்கிறது. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என தமிழின் அனைத்து வகை இலக்கியங்களிலும் பாடப்பட்ட ஒரு ஆறாக வைகை விளங்குகிறது. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. சிவபெருமானுக்கு நஞ்சளித்த கடலோடு வைகை சேருவதில்லை என்று 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் புகழேந்தி பாடுகிறார்.
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.
இப்பாடலில் சிவனுக்கு நஞ்சளித்த காரணத்தால் வையை கடல் புகவில்லை என்று புராண காரணத்தை சொல்லும் புகழேந்தி புலவர், அடுத்த வரியில் தமிழ் பாண்டிய நாட்டில் வைகையின் இருகரைகளில் இடத்தும் புறத்துமுள்ள நீர்நிலைகளை நிறைத்து பாய்ந்தோடும் வைகை என்று குறிப்பிடுகிறார். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பெரிய பாசன ஏரிகளை நிரப்புவதால் வைகை ஆற்று நீர் முழுவதும் பாசனத்திற்க்கே பயன்படும் வண்ணம் பாண்டிய மன்னர்கள் ஏரி, கண்மாய், குளங்களை வெட்டினர். பரப்பளவில் தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்களாக இராமநாதபுரம் பெரிய கண்மாய், ராஜசிங்கமங்களம் கண்மாய் போன்ற பெரிய கண்மாய்களை வைகையாறு நிரப்புகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் இருந்தே வைகையாற்றின் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டில் செய்திகள் வழியே அறிந்து கொள்கிறோம்.
பொழிமுக மீன்கள்:
ஆற்றாங்கரை கிராமம் வைகையும் கடலும் சேருமிடமான பொழியில் 88 வகை மீன்கள், இறால்கள், திருக்கை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை வைகையின் பொழியில் ஆவணம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. (https://mncfteamwork.blogspot.com/2024/11/blog-post_11.html)
தொல்லியல் ஆய்வாளர் திரு இராஜகுரு அவர்களுக்கு நன்றி:
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம் வைகையாறும் வங்ககடலும் ஒன்றும் சேரும் ஆற்றாங்கரை ஊராட்சி துவங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாடானை வட்டம் பாம்பாறு பாக் விரிகுடா கடலில் கலக்கும் சுந்தரபாண்டியபட்டணம் வரை இந்த பயணம் அமைந்தது. ஆற்றாங்கரை, அழகன்குளம், உப்பூர், காரங்காடு, தொண்டி, இடையன்வலசை ஆகிய பகுதிகளிலுக்கு சென்றோம். இக்கட்டுரையில் ஆற்றாங்கரை முதல் இராமநாதபுரம் மாவட்டம் எல்லையான சுந்தரபாண்டியபட்டனம் வரை உள்ள ஊர்களின் சிறப்புகளை காணலாம். இக்கட்டுரையில் வரும் தொல்லியல் தரவுகள் பல தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு அவர்கள் எழுதி, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தொகுப்பட்டுள்ள கட்டுரைகளில் (https://www.tholliyal.com) இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. கள ஆய்வுகள் வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புகளை பதிவு செய்து வரும் திரு.இராஜகுரு அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
கிழக்கு கடற்க்கரை பாண்டியன் நாட்டின் ஓர் எல்லை:
பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரின் ஆட்சி பரப்பாக வரலாற்றில் இராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரை இருந்திருக்கிறது. வெள்ளாற்றின் கீழேயுள்ள கிழக்கு கடற்கரை பாண்டிய நாட்டின் எல்லையாக இருந்ததை பெருங்கதை பாடல் கூறுவதாக வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு நூல் கூறுகிறது.
வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் - உள்ளார்
ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
பாண்டிநாட் டெல்லை பகர் (பெருங்கதை 2098)
பாண்டி நாட்டின் வட எல்லை வெள்ளாறு. தெள்ளாறு எனப்படும் தெள்ளாற்றின் பெரும் வழியே மேற்கு எல்லையாகும். புனர் கன்னி யென்பது குமரிமுனை ஆகும். பாண்டி நாட்டின் கிழக்கு எல்லையாக 56 காத தூரத்தில் அமைந்துள்ள கடல் (கடற்கரை) என குறிக்கப்படுகிறது. (108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு பக் 456)
அழகன்குளம் சங்ககால
துறைமுக
நகரம்:
இங்கு கிடைத்த மணி செய்யும் கற்கள், பாசிகள், தக்களி, சிப்பி, சங்கு வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கருப்பு சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன இவ்வூரின் பழமையைச் சொல்கிறது. ரோமானிய ஓடுகளும், ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால் இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பதையும், இங்குள்ள மக்களோடு அவர்கள் வாணிக உறவு கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
சேதுபதி கால சத்திரம் ஒன்று ஆற்றாங்கரை கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படுகிறது. |
1986-87 -ல் இருகுழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இந்த அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துப் பொறிப்பு உள்ள ஓடுகளும் கிடைத்துள்ளன. இதில் கிடைத்த பொருட்களின் கார்பன் சோதனையில் இது 2360 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்டுள்ளது.
1990 – 91 இல் இரண்டாம் கட்ட அகழாய்வில் 4 குழிகள் தோண்டப்பட்டன. ஹரப்பா நாகரிகத்தில் கிடைத்த களிமண் தகடு உருவம் போன்று ஒரு பகடைக் காய் கிடைத்தது. கி.மு.350-320-ஐச் சேர்ந்த யானை உருவம் உள்ள சங்ககால பாண்டியர் காசு கிடைத்தது.
1993-94 இல் மூன்றாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்தன.
1995-96 இல் நான்காம் கட்ட அகழாய்வில் காளை உருவம் பொறித்த சங்ககால பாண்டியர் காசு, குறியீடு உள்ள ஓடுகள், ரோமானிய கப்பல் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஓடு ஆகியன கிடைத்தன.
1996-97 இல் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் 6 குழிகள் தோண்டப்பட்டன. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்த அரசர்களின் வெள்ளிக்காசு, சங்ககால பாண்டியர், ரோமானியர் காசுகள் கிடைத்தன. 1997-98 இல் ஆறாம் கட்ட அகழாய்வில் 18 குழிகள் கோட்டைமேட்டிலும், ஒரு குழி அம்மன்கோயில் குடியிருப்பிலும் தோண்டப்பட்டன.
2015-16 இல் ஏழாம் கட்ட அகழாய்வு நீண்ட இடைவெளிக்கு பின் துவங்கியது.
2016-17 இல் எட்டாம் கட்டமாக விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டன.
மனிதன் முதன் முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரை காசுகள், சதுர வடிவில் செப்புக் காசுகள் என 50க்கும் மேற்பட்டவை இங்கு கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருட்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல்மணிகள், சங்கு ஆபரணங்கள், ஆபரணங்கள், பச்சைநிற கற்கள், கண்ணாடி மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. 150 கிராம் எடையுள்ள விதையுடன் செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய தானிய விதை கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
தேவிபட்டினம்:
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்குகடற்கரையில் திருச்சி செல்லும் சாலையில் தேவிபட்டினம் அமைந்துள்ளது. முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூரின் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள திலகேஸ்வரர் கோயில் சிவனுக்காகவும், கடற்கரை ஓரம் கடலடைத்த இராமர் கோயில் திருமாலுக்காகவும், படையாச்சி தெருவில் உள்ள உலகம்மன் ஆலயம் அம்மனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.
திலகேஸ்வரர் கோயில்:
கோபுரத்தை சிறியதாகவும், விமானத்தை பெரியதாகவும் அமைப்பது சோழர் கால கட்டடக்கலை. திலகேஸ்வரர் கோயில் விமானம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதால் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு கடலடைத்த இராமர் கோயில் உள்ளது. இது நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது. கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டும் முறையே இளங்கோ மங்கலமகிய உலக மாதேவிப்பட்டினம் என்றும் புறக்குடி ஆகிய ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1533 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு தேவிபட்டினத்தை தேவிபட்டினம் என்றே குறிப்பிடுகின்றது. இம்மூன்று கல்வெட்டுகளும் தேவிபட்டினம் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.
கடலடைத்த இராமர் கோயில்:
கடலடைத்த இராமர் கோயிலுக்கு எதிரில் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் மக்களால் வழிபடப்படுகிறது. இவ்வூர் இராமாயணத்தோடு தொடர்புடையது. இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள திருமால் கடலடைத்த இராமர் என அழைக்கப்படுகிறார். இக் கடலடைத்த இராமர் கோயில் நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.
பெருவயல் ரெணப்பலி முருகன் கோயில்:
தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரெணபலி முருகன் கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கல்வெட்டை 2024 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டெடுத்து படியெடுத்து ஆய்வு செய்தார். இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244)காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இந்த கோயிலுக்கு தானம்வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம்.
திருப்பாலைக்குடி சோழர் காலத்து சிவன் கோயில்:
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே திருப்பாலைக்குடியில் மந்திரநாதசுவாமி - நல்லமங்கை அம்மன் சிவன் கோயில் உள்ளது. இருதளங்களைக் கொண்டுள்ள இக்கோயில் விமானத்தின் மேல்பகுதி செங்கற்களாலும், பிற பகுதிகள் மணற்பாறை கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. உபபீடம் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தலவிருட்சம் பழமையான வன்னிமரம். கி.பி.1219ஆம் ஆண்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் அபிமானராமன் எனப்படுகிறது.
கி.பி.1281ஆம் ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு, மருதூர் என்ற மானாபரணபட்டினத்தைச் சேர்ந்த அம்பிசோறன் என்ற திருவாசகன், ஆளுடைபிள்ளையார் உருவத்தை இங்கு அமைத்தார் என்கிறது. மருதூர், மானாபரணபட்டினம் இவ்வூரின் வேறு பெயர்களாகலாம். ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் வெட்டிய மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கு மானாபரணன் என்ற பெயரும் உண்டு. அவன் பெயர் இவ்வூருக்கு சூட்டப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். பாலை மரங்கள் நிறைந்த குடியிருப்பு எனும் பொருளில் இவ்வூர் திருப்பாலைக்குடி எனப்படுகிறது. கோயில் அருகில் இடைக்காலப் பானை ஓடுகளுடன், போர்சலின் வகை சீனப்பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொண்டி:
சோழந்தூர்:
இராஜசிங்கப் பெருங்குளம் (எ) ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் :
இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது R.S.மங்கலம் என அழைக்கப்படும் இராஜசிங்கமங்கலம். இவ்வூரில் கைலாசநாதர் கோவில், கலியபெருமாள் கோவில், இராஜசிங்கப் பெருங்குளம் எனும் R.S.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி.900 முதல் கி.பி.920 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். இவன் காலத்தில் தான் பாண்டியர் வரலாறு கூறும் சின்னமனூர் செப்பேடுகள் உருவாக்கப்பட்டன. இச்செப்பேடுகளில் இராஜசிம்ம மங்கலம் பேரேரியுடன் நகரையும் இராசசிம்ம பாண்டியன் உருவாக்கியதை அவன் மெய்க்கீர்த்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“உலப்பிலோத வொலி கடல் போல்
ஒருங்கு முன்னந் தான மைத்த
இராஜசிங்கப் பெருங்குளக்கீழ்ச் சூழு நகரிருந்தருளி”
இம்மன்னன் காலத்திலேயே வைகை மற்றும் கோட்டக்கரையாறு ஆறுகளில் இருந்து இராஜசிங்கமங்கலத்து கண்மாய்க்கு நீர்வரத்துக்கால் அமைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நயினார்கோயில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை நதியிலிருந்து செல்லும் நாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் இராஜசிங்கமங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கண்மாய் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் (36,325 ஏக்கர்) ஆகும்.
கி.பி.1162 இல் திருநெல்வேலியில் இருந்து பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றியபோது பராக்கிரம பாண்டியனுக்கு உதவியாக வந்த இலங்கை பராக்கிரம பாகு என்ற மன்னனின் தளபதி இலங்காபுரித் தண்டநாயகன் மதுரை போவதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டதால் அச்சிங்களப்படை குலசேகர பாண்டியன் படையுடன் நடத்திய போரினால் இக்கண்மாய் பாதிக்கப்பட்டதெனவும் அதை தண்ட நாயகன் சரி செய்ததாகவும் இலங்கையின் மகாவம்சம் நூல் கூறுகிறது.
இக்கண்மாய் சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக பேணப்பட்டு நீரை வெளிவிட 48 மடை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. ”நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய்” என்ற வழக்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. இக்கண்மாய் நிரம்பும்போது அதிலிருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும் உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்மாய் மடைகள் பெயரில் செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் அமைக்கப்பட்டன.
கைலாசநாதர் கோவில்:
ஆர்.எஸ் மங்கலம் பிரம்மதேயமாக வழங்கப்பட்டிருப்பதால் இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோவிலும் மூன்றாம் இராசசிம்மன் காலத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலில் காணப்படும் கி.பி.1142 ஐச் சேர்ந்த சடையவர்மன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டு இவ்வூர் வரகுண வளநாட்டில் உள்ளதாக தெரிவிக்கிறது. அதில் பிரமதேயமாகவும் தேவமானியமாகவும் நம்பிள்ளை மானாபரணன் என்பவர் வழங்கிய செய்தி உள்ளது. இவர் மன்னனின் பிரதிநிதியாக இருக்கலாம். இக்கல்வெட்டில் மன்னன் பெயர் முதலிய செய்திகள் அழிந்த நிலையில் உள்ளன. “திருமடந்தையும் சயமடந்தையும்” என்ற மெய்கீர்த்தியைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி. 1132 முதல் கி.பி.1162 வரையிலான ஆண்டுகளில் ஆட்சி செய்த சடையவர்மன் சீவல்லபன் காலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது. இது இம்மன்னனின் 10 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது.
கலியபெருமாள் கோவில்:
இக்கோயிலின் அமைப்பை கொண்டு இது பாண்டியர்கள் கால கோயில் என கருதலாம். இவ்வூரை உருவாக காரணமான மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் மிகச்சிறந்த வைஷ்ணவனாக அறியப்பட்டவன் என சேதுபதிகள் செப்பேடுகள் என்ற நூலில் எஸ்.எம்.கமால் தெரிவிப்பதன் (பக்கம் 319) மூலம் இவ்வூரில் உள்ள கலியபெருமாள் கோவிலும் இராசசிம்ம பாண்டியன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும் என கருதலாம். இக்கோயிலில் கல்வெட்டுகள் கண்டறியப்படவில்லை.
அறுநூற்று மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் கண்மாய்க் கரையில் இடிந்த நிலையில் உள்ள சிவன்கோவிலில் பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு 2019 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இதில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன், மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில் முன்பு கிடக்கும் கற்கள், தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன.
இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் ‘மங்கலம்’ என அழைக்கப்பட்டன. அரசர்கள் பிராமணர்களுக்கு நிலதானம் தரும்போது தம் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர் உருவாக்கி உள்ளனர். அதேபோல் வணிகக் குழுக்களின் பாதுகாப்புப் படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயரில், பிராமணர்களுக்காக ஒரு ஊர் உருவாக்கி, அதை அவர்களுக்கு தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூரின் பெயர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். இதே அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது. கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் 18 ஆம் ஆட்சியாண்டில் (கிபி 1315) வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரும்பூர்க் கூற்றத்து அறுநூற்று மங்கலத்து திருஅகத்தீஸ்வரமுடைய நாயனார்க்கு, பாரூர் எனும் பதினெண்பூமி நல்லூரைச் சேர்ந்த இராக்கதன் பூவண்டான் என்பவர் ராக்காலத்து பூஜைக்கு தேவையான அமுதுபடி, கறியமுது, திருவிளக்கெண்ணெய் பல நிவந்தங்களுக்குரிய செலவுக்கு அறுநூற்று மங்கலத்து பெருங்குளத்து பள்ளமடையில் இருந்து நீர் பாயும் ஒரு ‘மா’ நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குளமும், பள்ளமடையும் தற்போதும் உள்ளன. கல்வெட்டில் நிலத்தைக் குறிக்கும் ‘ரூ’ எனும் குறியீடு உள்ளது. பதினெண்பூமி என்பது வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழு ஆகும். இவர்களின் குடியிருப்பு பாரூரில் உருவானபின் பதினெண்பூமிநல்லூர் என அவ்வூர் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். பாரூர் திருவாடானை அருகில் உள்ளது.
இங்குள்ள மற்றொரு கல்வெட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) மூன்று வரி கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இம்மன்னன் சோழநாட்டைக் கைப்பற்றி, பின் அவர்களிடமே வழங்கிய வரலாற்றுச் செய்தி இதில் உள்ளது.
குலமாணிக்கம் சுந்தரபாண்டிய நல்லூர் குணாபதபெருமாள் என்பவர் இக்கோயில் இறைவனுக்கு நிலதானம் வழங்கியுள்ள செய்தியை இங்கு காணப்படும் மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. குலமாணிக்கம் என்ற ஊர் பெயர் பிற்காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. குலமாணிக்கம் இங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. அறுநூற்று மங்கலம், அரும்பொற்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இது அரும்பூர் கூற்றம் என மாறியுள்ளது.
செங்கமடை ஆறுமுக கோட்டை:
இராமநாதபுரம் ஆர்.எஸ் மங்கலம் திருவாடானை சாலையில் அமைந்துள்ளது செங்கமடை. இவ்வூரில் பழமையான கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட விஜய ரெகுநாத சேதுபதி தன் ஆட்சிக்காலத்தில் மூன்று கோட்டைகள் கட்டி உள்ளார். கமுதி, பாம்பன் ஆகிய ஊர்களைப் போன்று இராசசிங்கமங்கலம் அருகில் செங்கமடையில் கோட்டைக்கரை எனும் ஆற்றின் கரையில் அறுங்கோண வடிவில் ஆறுமுகங்களுடன் கட்டப்பட்ட இந்தக்கோட்டை ஆறுமுகம் கோட்டை எனப்படுகிறது. இதை திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரெகுநாத சேதுபதி, பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு கட்டியுள்ளார். இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டு தற்போது அது தூர்ந்த நிலையில் உள்ளது. கோட்டையின் மேற்குப்பகுதியில் கல்நிலை வாசல்களுடன் இரு பெரிய அறைகள் உள்ளன. இவை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் சுவர்களும் கோட்டை சுவர்கள் போன்று பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. இங்கு விளக்கு வைக்கும் சாளரங்கள் உள்ளன. கோட்டையின் மேலே ஏறிச் செல்ல படிகள் உள்ளன. வீரர்கள் நின்றுகொண்டு கோட்டையின் வெளிப்பகுதிகளைக் கண்காணிக்கவும், துப்பாக்கியால் சுடவும் கோட்டைச் சுவர்களில் மேல், கீழ், நடுப் பகுதிகளில் துளைகள் உள்ளன. கோட்டையின் தென்பகுதியில் கோட்டையின் பொறுப்பாளர் தங்கி இருந்த செவ்வக வடிவிலான சிறிய அரண்மனை இடிந்த நிலையில் உள்ளது.
இக்கோட்டை கி.பி.1801 க்குப் பிறகு ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டதாக இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சுக் கட்டடக்கலையில் அமைக்கப்பட்ட இக்கோட்டையில் வீரர்கள் தங்குவதற்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் முனீஸ்வரர், கருப்பசாமி கோவிலும் அதன் அருகில் குளமும் உள்ளது. இக்குளம் கோவில் ஆகியவை கோட்டை கட்டிய காலத்திலேயே அமைக்கப்பட்டவை. இக்கோட்டைக்குள் முனீஸ்வரர், கருப்பசாமி கோயில், குளம் ஆகியவை உள்ளன. இக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் புதைந்தநிலையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் செங்கற்களை இணைக்க களிமண் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்செங்கற்கள், நீளம் 23 செ.மீ., அகலம் 13.5 செ.மீ., உயரம் 5 செ.மீ. எனும் அளவில் உள்ளன. இவை இடைக்காலத்தைச் சேர்ந்த செங்கல் அளவில் உள்ளன. இக்கட்டுமானம் பிற்காலப் பாண்டியர்களால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் அடிப்பகுதியாக இருக்கலாம். அக்குளத்தைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி பானை ஓடுகள் உள்ளிட்ட பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் அருகே ஓடும் ஆற்றின் பெயர் கோட்டைக்கரை ஆறு என அழைக்கப்படுகிறது. எனவே இங்கு சங்ககாலம் முதல் கோட்டை இருந்திருக்கலாம்.
காரங்காடு:
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கோட்டக்கரையாறு கடலில் சேருமிடத்தில் காரங்காடு அமைந்துள்ளது. இராமநாதபுரம் வனத்துறை சார்பாக காரங்காடு அலையாத்திக்காடுகளுக்குள் அழைத்து செல்லும் படகு சவாரி ஒருங்கிணைக்கப்படுகிறது. சுமார் 1 மணி நேர படகு சவாரிக்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இயற்கையான அலையாதிக்காடுகளை கண்டுகளிக்க ஏற்ற இடமாக காரங்காடு விளங்குகிறது. காரங்காடு அருள்மிகு சிவசந்தடி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
காரங்காடு ஒரு கிறித்துவ கிராமம் என்று சொல்லுமளவிற்கு இங்கே 90% பேர் கிருத்துவ மதத்தை பின்பற்றும் மீனவர்களாக இருக்கிறார்கள். காரங்காட்டில் அமைந்துள்ள ரோமானிய கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த தூய செங்கோல் மரியன்னை கோயில் 130 ஆண்டுகள் பழமையானது. இந்த தேவாலயத்தில் நடைபெறும் கொடியேற்றத்துடன் துவங்கும் காரங்காடு தூய செங்கோல் மரியன்னை திருத்தல திருவிழாவை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் நடைபெறும் மூன்று தேர்களின் வீதி உலா புகழ் பெற்றது. சப்பர பவனியில் முதல் தேர் புனித மிக்கேல் அதிதூதர், இரண்டாம் தேர் புனித செபஸ்தியார், மூன்றாம் தேர் புனித செங்கோல் மரியன்னை திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெறுகிறது.
அதே போல ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் சனிக்கிழமையில் புனித செங்கோல் மரியன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. மரியன்னைக்கு பொங்கல் வைத்து அதை கடல் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக படகில் கடலுக்குள் சென்று பொங்கலை மீன்களுக்கு இரையாக அந்நாளில் வழங்குவர். காரங்காடு மரியன்னை ஆலயம் அருகே நூற்றாண்டு கால சத்திரம் ஒன்று இருக்கிறது.
பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நீர்பட்டினம் காரங்காடாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு கருதுகிறார். காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப் பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூரில் இருந்து இலங்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இரவீந்திரன், ரவிச்சந்திரன், கிஷோர் ஆகியோர் இராமநாதபுரம் காரங்காடு அலையாத்திக்காடுகள் பகுதியில் 107 வகை பறவைகளை ஆவணம் செய்து ஆய்விதழ் வெளியிட்டுள்ளனர். (https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/8356)
எம். எஸ். உணவகம், உப்பூர் |
ஆனந்தூர் புத்த சமய தடங்கள்:
இலங்கையின் தொடர்பால் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்தது. அதற்கு சான்றாக இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை அருகே மணிகண்டியிலும், திருவாடானை ஆனந்தூர் மற்றும் சுந்தரபாண்டியன்பட்டினம் பகுதியிலும் புத்தர் சிலை கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன்பட்டணம் சிவன் கோயிலில் முன்பு புத்தருக்கு ஒரு சன்னதி இருந்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் 2016 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Photo by Mr. Rajaguru |
ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பத்தை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.
புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தரின் பெயரால் ஆனந்தூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அருகில் உள்ள சம்மந்தவயல் ஊரில் பழைய பெயர் அமணவயல் என இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் வடக்கலூர், தீர்த்தான்குளம் ஆகிய ஊர்கள் இதன் அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் சமணமும் செழித்து இருந்திது. சுத்தமல்லி என்பது சித்த மௌலி என்பதன் திரிபு. சித்தர்களாகிய மகாவீரர் அல்லது புத்தரின் உருவத்தைத் தலையில் தாங்கியவர்களைக் குறிப்பிடும் இச்சொல் அவர்கள் குடியிருந்த ஊருக்கும் பெயராகியுள்ளது. சுத்தமல்லியில் சோழர் கால கலைப்பாணியில் அமைந்த சிவன் கோயிலும், உலகம்மன் என்ற காளி கோயிலும் உள்ளன. இவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சிவன் கோயில் எதிரில் உள்ள ஏந்தல் கண்மாய் நீரை பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் கோயிலின் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவை சேதுபதி மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அருகருகே உள்ள ஆனந்தூர் சுத்தமல்லி அமணவயல் ஒரு காலத்தில் சமணமும் பௌத்தமும் செழித்திருந்த ஊரக அறிய முடிகிறது.
பாசிபட்டினம்:
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் பாசியாற்றங்கரையில் அமைந்துள்ளது பாசிபட்டணம். மதுரையை ஆண்ட பராக்கிராம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்ட குலசேகரபாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செயவதில் நடந்த போரின் போது கி.பி.1168 ல் பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரம பாகுவின் படையும், குலசேகரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் படையும் தொண்டி பாசிபட்டினத்தில் போரிட்டதாக ஆரிப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சோழர் தோற்றனர்.
பின்னர் நடந்த போர்களில் சிங்கள படையை சோழர் வென்றனர். சோழ நாட்டின் எல்லையான சுந்தரபாண்டியபட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இப்பகுதிகளில் சோழ நாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
Photo by Mr. Rajaguru |
பாசியம்மன் கோயில்:
ஏற்கனவே சிங்களபடையிடம் தோற்றுப்போன பாசிபட்டினத்தில் மீண்டெழுந்த தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோயிலை கி.பி.1168 க்கு பின் சோழர்கள் கட்டியுள்ளனர். இங்குள்ள கடற்கரை அருகில் பிற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயிலில், கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் வடக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது. கோயில் விமானம் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் சாலை விமானமாக அமைந்துள்ளது. விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்கு முதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிதிலமடைந்த பாசியம்மன் கோயிலை புதுப்பிக்க தொல்லியில் நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர் திரு.இராஜகுரு அவர்களின் 2023 ஆம் ஆண்டு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா:
இசுலாமியர்களும் படையாட்சிகளும் அடர்த்தியாக வாழும் ஊரு பாசிபட்டினம். மதநல்லிணக்கம் பேணும் மரபை கொண்ட தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் ஊர்களில் ஒன்று பாசிபட்டினம். இவ்வூரில் இறைநேசர் சர்தார் நைனா முகமது அடக்கமாகியுள்ளார். ஆண்டுதோறும் அவரின் நினைவுநாளில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. அருகில் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசிபட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடையும். அதனைத் தொடர்ந்து தர்கா நிர்வாகிகள் சந்தக்கூடு உடன் வந்தவர்களை நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க தர்காவிற்குள் அழைத்து செல்வர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினர் கொடிமரம் உள்ள கொடியை ஏற்றுவர். சாதி, மத வேறுபாடுகளை கடந்து இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஒன்றாக இந்த சந்தனக்கூடு திருவிழாவில் பங்குபெறுவர்கள். இங்கு அடங்கியிருக்கும் இறைநேசரின் தந்தையே கோட்டைப்பட்டினத்தில் அடக்கமாகியிருக்கும் ராவுத்தர் நெய்னார் என சொல்கின்றனர். மன்னர்களுக்கு குதிரைகளை கொடுத்த குதிரை வணிகராகத் திகழ்ந்தவர் என நம்பப்படுகிறது.
சங்க இலக்கியம் காட்டும் மருங்கூர் பட்டினம்:
சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் காட்டப்படும் மருங்கூர்பட்டினம் தான் இன்றைய அழகன்குளம் என்று சில அறிஞர்கள் கருதினார்கள். மருங்கூர் என்ற பெயர் கொண்ட ஊர்கள் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் (11.652585, 79.540049) 2024 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பாறு கடலில் கலக்குமிடத்தில் மருங்கூர் (9.829173, 79.068910) என்ற ஊர் உள்ளது. அவ்வூரில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்ட இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு. இராஜகுரு அவர்களால் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணற்றின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
நாகை மாவட்டம் (10.849503, 79.749714) வெட்டாறு ஆற்றாங்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டம் (8.171333, 77.503424) பழையாறு ஆற்றாங்கரையிலும் மருங்கூர் பெயர் கொண்ட ஊர் அமைந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் தான் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கிழக்குக்கடற்கரை தொண்டி அருகேயுள்ளது தீர்த்தாண்டதானம். இங்கு சோழர் கால சர்வதீர்த்தேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.
சர்வதீர்த்தேஸ்வரர் கோயில்:
சர்வதீஸ்வரர் கோயில் அமைப்பை நோக்குகின்ற போது இது சோழர்கால கோயிலாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இந்த இடம் சீதையை தேடி சோர்வடைந்த ராமருக்கு ஏற்பட்ட தாகத்தை போக்கிய தீர்த்தம் உடையது என்பதால் இது தீர்த்தம் தந்த ஸ்தானம் என்று அழைக்கப்பட்டது – பின்னர் அது தீர்த்தாண்டதானமாக மாறியது என்று புராணங்கள் கூறும். இங்குள்ள சிவபெருமானிடம் இராமர் அருள் பெற்று, கோயில் தீர்த்தத்தில் நீராடி ராமர் சென்றார் என்றும் புராணங்கள் கூறுகிறது.
தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை திட்டானம் என்றும், கோயிலின் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக்குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. திட்டானம் என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளி மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது.
இடையன் வலசை சமண கற்க்கோயில் :
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், புல்லக்கடம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட இடையன் வலசையில் சமணக் கோயில் அமைந்துள்ளது. இதனை ராமர் பாதக் கோயில் என்று குறிப்பிட்டு ஊராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக சாலை ஓரத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் பார்சுவநாதர் சிற்பம், பாத வழிபாடு சிலை, விநாயகர் சிலை, கருடாழ்வார் சிலை, ஆயுதமேந்தி நாயுடன் நிற்கும் வீரக்கல் சிற்பம் என ஒரே இடத்தில் சமண, சைவ, வைணவ, நாட்டார் வழிபாட்டு நெறிகளின் எச்சங்களை காண முடிகிறது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் இயங்கி வந்த பழமையான சமணர் கோயில் இன்று எவ்வித பராமரிப்புமின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. இடையன்வலசை மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலக்கிடாரம், கேணிக்கரை, கமுதி, மேல அரும்பூர், ஆனந்தூர், திருப்புல்லாணி கோரைக்குட்டம், பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழ்ச்சாக்குளம், பசும்பொன் ஆகிய ஊர்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ளது. இடையன்வலசையில் உள்ள இந்த கோயில் சமணர்களின் கட்டுமான கோயிலாகும்.
இவ்விடத்தில் மூன்று கட்டுமானங்களை பார்க்க முடிகிறது. கருவரை அமைப்புடன் உள்ள நடுக் கோயிலில் மூலவர் சிலை காணவில்லை. அக்கோயிலின் உட்பக்க கிழக்கு சுவரில் பார்சுவநாதர் சிற்பம் காணப்படுகிறது. நடுக்கோயிலின் வடக்கு பக்கத்தில் மண்டபத்தில் மேடையின் மீது இரு பாதங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டு வணங்கப்படுகிறது. நடுக்கோயிலின் தென்பக்கம் உள்ள சிறிய கோயில் கருவறையில் விநாயகர் சிலை காணப்படுகிறது. அதன் அருகே ஊருணி கரையில் உள்ள கருவேல மரத்தடியில் நடுகல் ஒன்றும் காணப்படுகிறது.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு அவர்கள் இக்கோயில் குறித்து கொடுத்த செய்தி குறிப்பில் சுந்தரபாண்டியன்பட்டினம், பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் கோபால மடம், ராமர் பாதம் என அழைக்கப்படும் கோயில், சமணப் பள்ளி ஆகியவை 2016-ம் ஆண்டு கண்டறியப்பட்டன. இங்கு 4 துண்டுக்கல்வெட்டுக்கள் உள்ளன. இவை திரிபுவனச் சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் காணப்படுகிறது. இவர் அரசு அதிகாரியாக இருக்கலாம். இதில் ‘இத்தேசிநா’ என வரும் சொல் மூலம் வணிகர்கள் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியிருப்பதை அறிய முடிகிறது.
இக்கோயில் கருவறை, மகா மண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மகாமண்டப வலதுபுற சுவரில் 27 செ.மீ. உயரம், 17 செ.மீ. அகலம் உடைய நின்ற நிலையிலான 23-ம் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இங்கு கல்லாலான சித்தசக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ மற்றும் எண்பட்டை தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில் உள்ளது. அதன் அமைப்பைக் கொண்டு கி.பி. 9-ம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப்பட்டதாகக் கருதலாம்.
இதன் கருவறையில் அமர்ந்த நிலையில், சமண தீர்த்தங்கரர் கற்சிற்பம் இருந்து காணாமல் போனதாகச் சொல்லப் படுகிறது. கருவறை விமானமின்றி உள்ளது.கருவறை, மகா மண்டபத்தில் மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிர் எதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன்களின் இரு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் இதன் உள்பகுதியில் சுவர் ஓவியங்கள் இருந்து அழிந்துபோன தடயங்கள் காணப்படுகின்றன. 18-ம் சமணத் தீர்த்தங்கரர் அரநாதர் வாகனம் மீன் என்பதால், இது அவருக்குக் கட்டப்பட்டதாகக் கருதலாம்.
மகாமண்டபம் சுவரில் உரலில் மருந்து இடிக்கும் ஒருவரின் புடைப்புச் சிற்பம், சமணர்களின் மருத்துவ தானத்தைக் குறிப்பதாக உள்ளது. இங்கு 4 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி.13-ம் நூற்றாண்டு விக்கிரமபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் உள்ளது.
இப்பள்ளியிலிருந்து, ஐம்பது அடி தூரத்தில் பாதக்கோயில் உள்ளது. இதை இராமர் பாதம் என்கிறார்கள். நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம் உள்ளது. இதன் இரு தூண்களிலும் வணங்கிய நிலையிலுள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர்களின் தலைக்கு மேல் ஒருகுடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதக்கோயில் என்பது உறுதியாகிறது. இவர்கள் இப்பாதக் கோயிலை அமைத்தவர்களாய் இருக்கலாம். இதன் முன்புறம் கருடாழ்வார் சிற்பம் சிறு சன்னதி அமைத்து நிறுவப்பட்டுள்ளது. இது சுந்தரபாண்டியன்பட்டினத்தில் இருந்து பின்பு அழிந்துபோன தசரதராம விண்ணகராழ்வார் என்ற பெருமாள் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டதாக இருக்கலாம்.
மேலூர், திருமலை, குன்றக்குடி, அனுமந்தக்குடி, இடையமடம் வழியாக மதுரை - தொண்டியை இணைக்கும் வணிகப்பெருவழி ஒன்று இருந்துள்ளது. இப்பெருவழிகளில் வணிகர்கள் தங்கள் வழிபாட்டுக்கென கட்டியுள்ள சமணப்பள்ளிகள் அவர்கள் இங்கு வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இராஜராஜசோழன் பெயரில் அமைந்த ''ராரா பெருவழி'' என பெயர் இருப்பதை இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள நம்புதாளையில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பகுதிகளில் ஓடும் விருசுழி மற்றும் பாம்பாற்றின் கரைகளில் சமணப்பள்ளிகள் பல இருந்துள்ளன. அனுமந்தக்குடியில் ஒரு கட்டுமான சமணப் பள்ளி வழிபாட்டில் உள்ளது.
இப்பகுதியில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மதங்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில், சைவ, வைணவ கோயில்களும், சமண, புத்த பள்ளிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும் இப்பகுதியில் பல கோயில்கள் இடிந்த நிலையில் காணப்படுவது இதற்குச் சான்றாக உள்ளது. இதன் முன்புறம் கி.பி. 1865 இல் கேரளாவில் தயாரிக்கப்பட்ட ஓடுகள் கொண்டு வேய்ந்துள்ளனர். ஆனால் அது முற்றிலும் இடிந்துவிட்டது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்த சமண புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதங்களுக்கு மாறியதால், இப்பகுதிகளில் இருந்த சமண, புத்தப் பள்ளிகள் கைவிடப்பட்டு இடிந்து போன நிலையில், பிற்காலத்தில் அவை மடங்களாகவோ, சத்திரங்களாகவோ, கோயிலாகவோ மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளியாக வழிபாட்டில் இருந்திருக்கவேண்டும். அதன்பின்பு இது சமணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதிகள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப்பிடும் போது இடையமடம் குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ஆனாலும் கற்களை மாற்றி அமைத்து கட்டப்பட்டுள்ளதால் இதன் அமைப்பு மாறியும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டும் உள்ளன. பார்சுவநாதர் சிற்பம் சுண்ணாம்பு சுதை கொண்டு பூசி மறைக்கப்பட்டிருந்துள்ளது. சுண்ணாம்பு பெயர்ந்து விழுந்த பின் சிற்பம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இங்குள்ள மூலஸ்தான நுழைவுவாயிலின் மேல்பகுதியில் உள்ள கஜலட்சுமி சிற்பம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் எதிர்புறம் விநாயகருக்கென தனி சன்னதி உள்ளது. இதில் தாமரைப் பீடத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் இருக்கிறார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இது மடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
சமணப் பள்ளியாகவும், கோபால மடமாகவும் வரலாற்றில் இடம்பெற்ற இக்கோயிலின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் உள்ளே இடிந்து அழிந்து வருகிறது. இதைப் பழுது நீக்கித் தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று இராஜகுரு அவர்கள் தெரிவித்தார்.
போர் வீரர்கள் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்:
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், புல்லக்கடம்பன் ஊராட்சி, இடையன்வலசை கிராமத்தில் அமைந்துள்ள இடையமடம் அல்லது ராமர் பாதக்கோயில் என்று அழைக்கப்படும் சமணக் கோயிலின் அருகே வீரர்களின் நினைவாக எழுபட்ட சிறிய நடுகல் காணப்படுகிறது.இதனை தொல்லியல் ஆய்வாளர் திரு. அபிஷேக் அவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆவணம் செய்தார். கருவேலமரத்தடியில் காணப்படும் இந்நடுகல் கி.பி. 16 - 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். பண்டைய தமிழர்கள் தங்கள் ஊர், ஆநிரைகள் மற்றும் வீரர்களை காக்க போர் புரிந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் நடுகற்களை நட்டு வழிபட்டனர். இந்த நடுகற்களில் போர்வீரர்களின் உருவங்களும், அவர்களுடன் போரிட்ட நாய்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இடையன்வலசை ராமர் பாதகக் கோயில் அருகே காணப்படும் நடுகலில் இரண்டு போர் வீரர்கள் வாள் மற்றும் கேடயத்துடன் இரண்டு நாய்களை வைத்துள்ளனர். அவர்களின் பின்புறம் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு நிற்கிறார். போர் வீரர்களுக்கு முன்னதாக நாய்கள் காட்டப்பட்டு இருக்கும் சிலைகள் இராமநாதபுரத்தில் மிக மிக குறைவு. நடுகல்லின் உயரம் 24 செ.மீ, அகலம் - 30 செ.மீ ஆகும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாய்கள் காட்டப்படும் நடுகற்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வகையில் இடையன்வலசை நடுகல் கவனம் பெறுகிறது. அதில் நாய் உருவங்கள் இருப்பது தனித்துவமான ஒன்றாக விளங்குகிறது. இந்த நினைவுக்கல் பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் தனியாக கிடக்கிறது. சிறியதாக இருப்பதனால் தொலைந்துபோக அதிகம் வாய்ப்புள்ளது. இதன் அருமை கருதி இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் துறை இந்த நினைவுக் கல்லை பாதுகாக்க வேண்டும். திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் 2019 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புல்லுக்குடி:
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே உள்ளது புல்லுக்குடி (9.701751, 78.931600) கிராமம். இவ்வூரில் உள்ள கயிலாசநாதசுவாமி சிவன் கோயில் விமானத்தின் கீழ்பகுதியில் குமுதம், ஜகதி, பட்டிகை ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. இது 105 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். கல்வெட்டு, கி.பி.1190 முதல் கி.பி.1218 வரை மதுரையை ஆட்சி செய்த முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. இதன் முதல்பகுதி அழிந்துள்ளது. மன்னரின் பெயர் வரும் இடங்கள் சேதமடைந்துள்ளன. மெய்க்கீர்த்திகொண்டு மன்னர் பெயர் அறியமுடிகிறது. மன்னரின் ஒன்பதாம் ஆட்சியாண்டின் எதிராமாண்டின் எதிராமாண்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி.1201 ஆகும்.
புல்லுக்குடி சிவன் கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் அரும்பொற்கூற்றத்தில் உள்ள புலிகுடி எனவும், இக்கோயில் இறைவன் பெயர் ஸ்ரீகயிலாயமுடையார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புல்லுகுடி எனும் இவ்வூர் பெயர் சோழர் காலத்தில் புலிகுடியாக மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புல் எனும் பெயரில் உள்ள ஊர்களில் எல்லாம் சமண சமயத் தடயங்கள் காணப்படுகின்றன. புல்லுகுடியிலும் கண்மாய் கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமண தீர்த்தங்கரர் சிலை இருந்து பின்பு அது காணாமல் போயுள்ளது. இப்பகுதி அரும்பொற்கூற்றத்தில் இருப்பதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தொண்டி செல்லும் சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள அரும்பூர் இக்கூற்றத்தின் தலைமையிடமாக இருக்கலாம்.
இதில் கேரளசிங்க வளநாடு (திருப்பத்தூர்), அண்டநாடு (திருப்புவனம்), வடதலைச் செம்பில் நாடு (முதுகுளத்தூர்) ஆகிய நாடுகளும், அரும்பொற்கூற்றம், மிழலைக் கூற்றம் (ஆவுடையார்கோயில்) ஆகிய கூற்றங்களும் அண்டநாட்டு பெருமணலூர் (கீழடி அருகில் உள்ளது), வடதலைச் செம்பில் நாட்டு ஆயக்குடியான அழகியபாண்டியநல்லூர் (பரமக்குடி அருகில் உள்ள ஆய்குடி), கேரளசிங்க வளநாட்டு வெளியாற்றூர், மிழலைக் கூற்றத்து சிபிராந்தகநல்லூர், கூற்றுத்தைச்சன்னூர், வடபாம்பாற்றுதியூர், பொன்பற்றி போன்ற பல ஊர்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் பெயர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டின் மெய்க்கீர்த்தியில் “வில்லவர், செம்பியர், விராடர், மராடர், பல்லவர் திறையுடன் முறை முறை பணிய” என வருகிறது. அதாவது செம்பியர் எனும் சோழர்களும் திறையுடன் வந்து தன்னைப் பணிந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1178 – கி.பி.1218) தயவில் ஆட்சி நடத்தி வந்தவர் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவதான இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியினை புல்லுக்குடி சிவன்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலஅரும்பூர் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில் சேதுபதி கால சூலக்கல் ஒன்றும், மேல அரும்பூர் உத்தமபாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும், கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக மேலும் இரண்டு சோழர் கால சூலக்கற்கள் 2017 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு அவர்களால் கண்டறியப்பட்டது. கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்தூர் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாசநாதசுவாமி கோயிலுக்கு அரும்பூரில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கியுள்ள செய்தியினை மேலஅரும்பூர் சூலக்கல் தெரிவிக்கிறது. சோழர் கால சூலக்கற்களில் கல்வெட்டுகள் இல்லை.
சுந்தரபாண்டியன் பட்டணம்:
ஏகாம்பரேஸ்வரர் கோவில் (9.842226, 79.094245) என்று அழைக்கப்படும் பழமையான சிவன் கோயில் இவ்வூரில் உள்ளது. “முத்தூற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என கல்வெட்டுகளில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் பழைய பெயர் சுத்தவல்லி. இது முதலாம் குலோத்துங்கசோழனின் மகள் சுத்தமல்லியாழ்வார் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லி என்ற இவ்வூர் பெயர் சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டிருக்கிறது. சுந்தரபாண்டியன்பட்டினமும், சோழகன்பேட்டையும் இரட்டை வணிக நகரங்களாக இருந்திருக்க வேண்டும். இவ்வூர் மலைமண்டலமான சேர (கேரள) நாட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. மலைமண்டலத்துக் காந்தளூரான எறிவீரபட்டினத்து இராமன் திருவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண்பூமிச் சமையச் சக்கரவத்திகள் என்பவர் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் சொக்ககூத்தர், தம்பிராட்டி என இறைவன், இறைவி பெயர் சொல்லப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் ஆட்டை எனும் சோழர்கள் பயன்படுத்திய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரில் பாண்டியர் காலத்திலேயே ஒரு மடம் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போதும் சிவன்கோயிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது. இதன் அமைப்பைக் கொண்டு இம்மடம் கி.பி.8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதலாம். இந்த மடத்துக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. இம்மடம் பௌத்தமடமாக இருந்து பின் சைவ மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். அங்குள்ள ஒரு நாசிக்கூட்டில் புத்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது இதை உறுதிப்படுத்துகிறது. அதேபோல இராமேஸ்வரம் அருகில் அரியாங்குண்டு பகுதியில் ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்துள்ளது. அங்கு புத்தரின் கற்சிற்பமும் கிடைத்துள்ளது.
எழுத்து & தொகுப்பு
தமிழ்தாசன்
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. ரெ. வெங்கடராமன் (சூழல் ஒளிப்பட கலைஞர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தாவரவியல் ஆய்வாளர்)
- மரு. த. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திரு. பு.இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. ந. இரவீந்திரன் (பறவையியலாளர்)
- திரு. சி. சதிஷ்குமார் (பசுமை செயல்பாட்டாளர்)
- திரு. வி. கௌதமா (பறவையியல் ஆர்வலர்)
- திரு. கே. ஸ்ரீனிவாசன்
- திரு. தமிழ்தாசன் (எ) மே. ஜான்சன் (பண்பாட்டுச் சூழலியலாளர்)
Comments
Post a Comment